நதி

கதை கவிதை கட்டுரை

Monday, June 05, 2006

Koala Bear



Photo - திலீபன்
மெல்பேர்ண்-அவுஸ்திரேலியா
17.1.2006
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, February 13, 2005

இன்டர்நெட் காதல்

ஈழத்து இளங்குயிலே
இன்டர் நெட்டில் உனைப் பார்த்தேன்
ஒஸ்ரியா வந்திருந்தும்
ஒன் லைனில் உனைக் கேட்டேன்

என் நோட் புக்கில் குடிபுகுந்து
வின்டோஸைத் திறப்பவளே
உன் ஹாட்புக்கில் இடம் தேட
பாஸ் வேர்ட்டைச் சொல்லாயோ?

கண்ணே உன் போன் நமபர்
ஹாட் பீற்றாய் அடிக்குதடி
உனைக் காணாத நேரமெல்லாம்
ஹன்டி எந்தன் கையிலடி

எப்போதும் உனை ரசிக்க
எனக்குள் சற்றலைற்றைப் பூட்டி வைத்தேன்
சீக்கிரட்டாய் உடன் வந்து
ஒளி பரப்புச் செய்யாயோ?

ஹார்ட் கோர் இல் உனை மயக்க
ஹார்ட் வெயர்கள் பொருத்தி வைப்பேன்
ஸொப்ற் ஆன உன் அழகை
ஸொப்ற் வெயர் ஆய்ச் செதுக்கி வைப்பேன்.

திலீபன் - 1997

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, July 04, 2004

ஓ..என் நண்பனே..! மாவீரனே..!

மாற்றான் குண்டுகள் - உன்
மர்பைத் துளைத்தனவோ!
மாமனிதன் உன்னை
மண்ணில் சாய்த்தனவோ!
சிதறிய தேங்காய் போல்
சில்லாகிப் போனாயோ! - அன்றி
நரிகள் கையில் சிக்காது
நஞ்சை நீ மென்றாயோ!

சூரியக் கதிர் சமர்தனிலே
சூரியன் நீ அணைந்தாயே!
ஈன்றெடுத்த மண்தனிலே
இரத்த விதை விதைத்தாயே!
மாவீரர் சமாதியிலே
மறவனாய் மலர்ந்தாயே
வெளிநாட்டுத் தமிழருக்கும்
வெகுட்சி வரச் செய்தாயே!

வெங்கதிர்ச் செல்வன் படைதனிலே
வேங்கையாய் பாய்ந்தவனே
வேட்டை ஆட வந்தவரை
வெட்டிப் புதைத்தவனே
ஊர் உறவு வாழ்வதற்காய்
உறங்காமல் உழைத்தவனே!
உறங்காமல் உழைத்ததினால் - இன்று
உறக்கத்தில் போனாயோ!

தானைத் தலைவன் ஆணைப்படி
அணி வகுத்த புலிகளைப் பார்
படையெடுத்த பகைவர் கொடி
பாதியிலே எரிந்ததைப் பார்
முப்படை மூடரெல்லாம்
முல்லையிலே முறிந்ததைப் பார்
கூவி வந்த கூட்ட மின்று
குரலிழந்து போனதைப் பார்

மண்ணோடு நீ கலந்து
மலராகிச் சிரிக்கின்றாய்
விண்ணோக்கி நான் பார்த்தால்
விண் மீனாய் ஒளிர்கின்றாய்
வாள் ஏந்தும் வீரருக்கு
வேராக நிற்கின்றாய்
விடிவு தேடும் மக்களுக்கு
விடிவெள்ளி நீ தானே.

(சூரியக்கதிர் தந்த பாதிப்பில் எழுதப்பட்டது.)

திலீபன் செல்வகுமாரன்
யேர்மனி
1997


பிரசுரம் - களத்தில்
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, June 08, 2004

முதுமை

புயல் அடித்துச் சாய்ந்த மரம் போல்
நானும் கட்டிலில்

விம்மி விம்மி அழுகின்றேன்
பகல் இரவு முழுவதும் அழுகின்றேன்

வேதனையைத் தாங்க முடியவில்லை
கையை அசைக்க முடியவில்லை
இதயம் நின்று விடும் போலுள்ளது

என்னவென்று தெரியாத பயம்
என்னை ஆட்கொள்கிறது
சாவு என்னை அழைக்கிறது போலுள்ளது

என் அழகிய முகம் சிரிப்பு
எல்லாம் வாடி விட்டன

எனக்கா........! இந்த நிலைமை.......!
நம்ப முடியவில்லை
இதுவா........! வாழ்க்கை.......!

எரியும் மெழுகுவர்த்தியின்
நிலையா எனக்கும்

இளம் மனிதர்களே!
வீண் கனவுகள் காணாதீர்கள்
வீண் ஆசைகள் கொள்ளாதீர்கள்

இன்று எனக்குள்ள விதிதான்
நாளை உங்களுக்கும்

இன்று பெரிதாகத் தோன்றுவதெல்லாம்
நாளை சாம்பலாகி விடும்
இன்று பூத்து அழகாக இருப்பதெல்லாம்
நாளை மண்ணாகி விடும்

இந்த வாழ்க்கை என்பது
ஒரு கெட்ட கனவைப் போன்றது
நீர்க் குமிழியைப் போன்றது.

இளம் மனிதர்களே!
வீண் கனவுகள் காணாதீர்கள்
வீண் ஆசைகள் கொள்ளாதீர்கள்

- திலீபன் -
யேர்மனி
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, June 01, 2004

இசை ஏன் இளைய சமுதாயத்தைக் கூடுதலாகக் கவர்கிறது

ஒரு மனிதனின் ழூளையில் அவன் இளமைப் பருவத்தில் கேட்டு, ரசித்து அவனுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைக் கொடுத்த இசைகளும், பாடல்களும் எந்தக் காலத்திலும் அழியாமல் பதியப்பட்டிருக்கும். எந்த வயதிலும் அவன் அதை நினைவு கூரக்கூடியதாக இருக்கும்.

இளைய தலைமுறையினர் எப்பொழுதும் சினிமாப்பாடல்களுடனேயே உழலும் பொழுது அவர்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று பெரியவர்கள் அலுத்துக் கொள்ளுகிறார்கள்;.

ஆனால் இசையினால் உடலிலும் மனதிலும் மிகச்சந்தோஷமான எழுச்கியும் கிளர்ச்சியும் பெரியவர்களை விட இளைஞர்களுக்குத்தான் கூடுதலாகத் தோன்றுகிறது. இதுவே இளையவர்கள் பெரியவர்களைவிடக் கூடுதலாகப் பாடல்களைக் கேட்பதற்கும் இசை வாத்தியங்களை விரும்பி ரசிப்பதற்கும் காரணமாகின்றது.

ஆனால் பழைய பாடல்களோ கர்நாடக இசைகளோ இவர்களைப் பெரிதும் கவர்வதில்லை. ஏனெனில் பருவ வயதில் இவர்களிடம் கூடிய ஹோர்மோன்கள் சுரக்கப் படுவதால் இசைக்கருவிகளின் அதீதமான சத்தங்களும் அடிகளும் நிரம்பிய புதிய பாடல்கள் இவர்களை மிகவும் கவர்கின்றன.
சத்தமான இசைகள் இவர்களினுள் ஊடுருவி இவர்களின் இதயத்துடிப்பை அதிகமாக்கி மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கின்றன. இதனால்தான் பாட்டுக் கேட்க முடியா விட்டால் எதையோ இழந்தது போல் சோர்ந்து போய் விடுகிறார்கள்.

இந்த வயதில் அவர்களுக்கு இருக்கும் அதிகமான படிப்பு இன்னும்
விளையாட்டு வேலை பணநெருக்கடி தேவைகள்.... என்று சேர்ந்து ஒரு இறுக்கமான சு10ழ்நிலையில் அமுக்கப் பட்டுக் கொண்டு வாழும் இளைய தலைமுறையினருக்கு இந்த இசைகள் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றன. இதுவே இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானின் இசை போன்றவை இளைய தலைமுறையை வெகுவாகக் கவரக் காரணமாயிருக்கின்றன.

இளைய தலைமுறையினரின் புதிய பாடல் ரசனையை வைத்து அவர்களின் இசை ரசனை சரியில்லையென்று பெரியவர்கள் நினைப்பது மிகவும் தவறு.
ஏனெனில் புதிய பாடல்களிலும் சரி பழைய பாடல்களிலும் சரி நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.

திலீபன் செல்வகுமாரன்
யேர்மனி
பிரசுரம் - இளங்காற்று மார்ச்-1997
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, May 25, 2004

நகங்களை நீங்களும் கடிக்கிறீர்களா?

அப்படியாயின் இதைத் தொடர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு.

நகங்களை ஏன் தேவையில்லாமல் கடிக்கிறார்கள்? இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வந்திருக்கின்றது. சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளின்படி, குழந்தைகள், சிறுவர்கள் மட்டுமன்றி, வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வயது வந்தவர்களில் 20வீதமானவர்கள் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற பொருட்களையோ கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

இதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டிய விடயம் என்னவெனில், தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது.

நகங்களைக் கடிக்கும் 109 பேரினை வைத்து ஆராய்ச்சி செய்ததில், தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள் இருந்திருக்கின்றார்கள்.

மேலும் இவர்கள் தங்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் தீவிரமாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையும் அதே நேரம் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளில் குறைவாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையோ அன்றி நகங்களைக் கடிக்காமலேயே கூட இருக்கும் தன்மையையும் கொண்டிருந்தார்கள்.

தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு இயலாமை நிலையிலே தங்கள் நகங்கள் மீது கோபங்களைக்காட்டி விடுபவர்களும் உண்டு.

ஆராய்ச்சியாளர்களின் தகவல்களின்படி பார்க்கும் போது, நகம் கடிப்பவர்களே அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். நகம் கடிக்கும் பெண்கள் மென்மையாக இருக்கிறார்கள். அதே வேளையில் நகம் கடிக்கும் ஆண்களோ முரட்டுத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள். நகங்களைக் கடிப்பதால் நகங்களைச்சுற்றி விரல்களில் கண்களுக்குப் புலப்படாத புண்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த நிகழ்வை இல்லாமற் செய்வதற்கு மருத்துவக் காப்புறுதிகள் உதவவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.

திலீபன் செல்வகுமாரன்
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, May 23, 2004

மூளையின் சக்தி

ஒரு குழந்தையின் மூளையில் சிந்திக்கக் கூடிய ஷெல்கள் 100 மில்லியார்டன் வரை உள்ளன.

ஒன்பது மாதத்தில் -
ஒரு குழந்தை தனது தாய்மொழிக்கும் வேற்று மொழிகளுக்குமான வித்தியாசங்களைத் தெரிந்து கொள்கிறது.

பத்து வயதுக்குள் -
மூளையில் உள்ள தொடர்புகள் நன்கு விருத்தியடைந்து விடுகின்றன. இந்த வயதுக்குள் மூளையில் 100 பில்லியன் தொடர்புகள் உருவாக்கப் படுகின்றன.

பத்தாவது வயதில் -மூளை முழுமையாக விருத்தியடைந்து விடும். 10 மில்லியன் செய்திகளைப் பதியக் கூடிய தன்மையையும் செயற் படக் கூடிய நிலையையும் மூளை பெற்றுவிடும். சில சமயங்களில் மணிக்கு 500 கி.மீ துரித கதியில் மூளையின் செயற்பாடுகள் இருக்கும்.

பதினாறாவது வயதில் -மூளைக்குள் உள்ள அதிகம் பாவிக்கப் படாத மூளைத் தொடர்புகள் அற்றுப் போய் விடுகின்றன.
ஒரு விநாடிக்கு கிட்டத்தட்ட 1000 தொடர்புகள் இல்லாமல் போகின்றன.
இந்த நிலையில்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட மூளை அமைப்பு உருவாகிறது.

இருபத்தைந்தாவது வயதில் -
மூளையின் அளவு ஏறக்குறைய 1500 கிராமாக இருக்கிறது. மூளைச்
ஷெல்களுக்கிடையே உள்ள சைகைப்பாதை (signalbahnen) யை நீட்டிப் பார்த்தால் அது ஏறக்குறைய ஒரு மில்லியன் கி.மீ அளவுக்கு நீளமாக இருக்கும்.
அளவுக்கதிகமான வேலை மற்றும் பிற அழுத்தங்களினால் (Stress) மூளை சுருங்கி விடலாம். உதாரணமாக எமது மூளையில் நினைவுகளைப் பதிந்து வைத்திருக்கும் பகுதிகளும், படிப்பதற்கான பகுதிகளும் 15 வீதம் வரை சுருங்கி விடும்.

முப்பத்தைந்தாவது வயதில் -
10 வயது மூளையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அரை மடங்கு தொடர்புகள்தான்
மூளையில் இருக்கும். யோசிப்பதற்கு அதிகளவு சக்திகள் தேவைப்படாது.

ஐம்பதாவது வயதில் -மில்லியார்டன் அளவில் மூளையில் உள்ள ஷெல்கள் இறந்து விடுகின்றன. ஆனாலும் எங்களது வேலைகளை ஒழுங்காகத் தொடர்ந்து செய்வதற்குப் போதுமான அளவு ஷெல்கள் இருக்கும்.

அறுபதாவது வயதில் -மூளைக்குப் பயிற்சி (GegirnJogging) கொடுப்பது நல்லது.

தனது எண்பதாவது வயதில்தான் Gothe என்பவர் தனது Faust என்ற பிரபல்யமான கதையை எழுதி முடித்தார்.

திலீபன் செல்வகுமாரன் - யேர்மனி
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, May 22, 2004

கெரோயின்

பொல்லாத போதைப் பழக்கம்
இல்லாதிருப்பதே நல்லொழுக்கம்


கெரோயின் (Heroin), மோர்பைன் (Morphine), கொக்கயின் (Kokain), போன்ற மருந்துகளைப் பாவித்ததால் 1989ம் ஆண்டில் 991 பேரும் 1994ம் ஆண்டில் 1700 பேரும் உயிரிழந்துள்ளனர். 1989ஐயும் 1994ஐயும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கையில் போதை மருந்தினால் இறந்தவர்களது தொகை கிட்டத்தட்ட இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.

போதை மருந்துகளை விற்பனை செய்வது, அதனை வைத்திருப்பது போன்றவற்றிற்குச் சட்டப்படி அநுமதி தருவதால் இப்பிரச்சனையைக் குறைக்கலாம் என்று ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டது. இது எந்த வகையில் பயன் தரும் என்பதில் மாற்றுக் கருத்துக்களும் இல்லாமல் இல்லை.

போதை மருந்தைக் கையாளும் மாபியா என்று அழைக்கப்படும் கூட்டத்தினர் மிகவும் பலம் வாய்ந்து கொண்டு வருகின்ற போதிலும், UNO அமைப்பின் போதைப் பொருட்களுக்கு எதிரான பிரிவினர் மாபியா கூட்டத்திற்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் UNO எடுக்கும் நடவடிக்கைகள் பல தோல்வியில் முடிந்துள்ளன. எனினும் UNO அமைப்பின் போதைப் பொருட்களுக்கு எதிரான பிரிவினர் போதைப் பொருட்களைப் பாவிப்பதை சட்டபூர்வமாக்குவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கிழக்கு ஐரோப்பியாவின் எல்லைகள் திறக்கப்பட்டிருப்பதால் மத்திய ஐரோப்பியாவில் உள்ள போதைப் பொருட்களைக் கடத்தும் கூட்டங்கள் மிகவும் உசாராகச் செயற்பட ஆரம்பித்துள்ளன.

போதைப் பொருட்கள் பாவிப்பதைச் சட்ட பூர்வமாக்குவதாயின் அதற்கு உலக நாடுகள் எல்லாவற்றினதும் ஒத்துழைப்புத் தேவை.

அப்படி இல்லாத பட்சத்தில் பெரும் ஒழுங்கின்மை ஏற்படுவதற்கு இடமுண்டு.

உதாரணமாக ஹொலண்ட் நாட்டில் சில போதைப் பொருட்களுக்குச் சட்டரீதியான அநுமதி தரப்பட்டது. அநுமதி தராத மற்றைய நாடுகளில் உள்ள போதைப் பொருட் பிரியர்கள் உல்லாசப் பயணிகளாக ஹொலண்ட் நாட்டுக்குச் சென்று போதைப் பொருட்களைப் பாவிக்க இது ஏதுவாக இருந்தது.

இப்படியான சில ஒழுங்கின்மையால் உலக நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகிறது. இவ் ஒத்துழைப்பிற்கு எல்லா நாடுகளும் முன்வருமா என்ற பெரியதொரு கேள்வியும் எழாமல் இல்லை.

போதைப்பொருட்களின் பாவனையை சட்டபூர்வமாக்குவதால், போதைப் பொருட்களை கையாளுவதால் ஏற்படும் பல குற்றச் செயல்கள் இல்லாமல் போவதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு. ஆனால் போதைப் பொருட்களைப் பாவிப்பவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள் உண்டா என்று கேட்கும் பட்சத்தில், இல்லை என்ற பதிலே முன்வந்து நிற்கிறது.

மருத்துவர் மூலம் போதைப்பொருட்களைக் கொடுத்தால் என்ன? என்று இன்னுமொரு அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் வெற்றியளிக்காது என்பதை இரண்டு காரணங்களால் விளக்கலாம். ஒன்று மருத்துவரின் வேலைக்கு இது பொருத்தமானதாக இல்லை. மற்றையது மருத்துவரிடம் கிடைக்கும் போதைப்பொருட்களின் விலையை விட, கறுப்புச்சந்தையில் கிடைக்கும் போதைப் பொருட்களின் விலை மலிவாக இருக்கிறது.

ஆகவே சட்டரீதியான அநுமதி என்பது இப்பிரச்சனையை சிக்கலாக்குமே தவிர, ஒரு போதும் ஒரு தீர்வாகாது.

அப்படியாயின் இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்த முடியாதா? என்ற கேள்வி முன் எழுகிறது.

முடியும். அரசாங்கங்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் செயற்பாடுகள் இங்கு முக்கியமானவை. அவை ஒன்று கூடி வரும் போது இதற்கொரு தீர்வைக் காண முடியும்.

போதைப் பொருட்களைக் கையாளும் கூட்டங்களுக்கு எதிராக அரசாங்கங்கள் இன்னும் பலமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். போதைப் பொருட்கள் மக்களின் கைகளைச் சென்றடையாதவாறு பாதுகாக்க வேண்டும். மருந்துக் கடைகளில், நாட்டு எல்லைகளில், விமான நிலயங்களில் ஒவ்வொரு அரசாங்கமும் பெரியசோதனைகளை ஏற்படுத்தி பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். போதைப் பொருள் விற்பனையளர்கள், பாவனையாளர்களுக்கு எதிராக அரசாங்கங்கள் பலமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப் பொருள் விற்பனையாளர்களைக் கைது செய்யும் பட்சத்தில் எந்தவித கருணைகளுமின்றி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

போதைப் பொருட்களின் பாவனையாளர்களும், அதில் ஆர்வம் உள்ளவர்களும் இப்போதைப் பழக்களிலிருந்து பயந்து ஒதுங்கும் வகையில் அரசாங்கத்தின் தண்டனைகள் கடுமையானதாக இருக்கவேண்டும்.

போதைப் பொருட்களின் விற்பனை நிலையங்களை காவல்துறையினர் கண்டுபிடித்து அங்கு கடமையாற்றல் வேண்டும். காவல்துறையினர் கண்காணிப்பதால் போதைப் பொருட்களின் பாவனையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் தொடர்புகள் இல்லாமல் போய் விட வாய்ப்புகள் உண்டு.

போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு சிறைத் தண்டனைகள் மட்டுமின்றி அவர்களிடம் தண்டனையாகப் பணங்களையும் அறவிடுதல் வேண்டும். இப்பணங்களை போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை செய்யவும், சிகிச்சைக்குத் தேவையான இடங்கள், படுக்கைகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தவும் வேண்டும்.

தங்களது பிள்ளைகள் இத் தீயபழக்கங்களுக்கு அடிமையாகாத வண்ணம் பெற்றோர்களின் செயற்பாடுகளும் இருத்தல் வேண்டும்.

இளைய பருவத்தினர் இப் பழக்கவழக்கங்களுக்கு ஆளாவதற்கான காரணிகளும் சூழ்நிலைகளும் என்ன?

சில ஆய்வாளர்களின் கணிப்பின்படி கீழே தரப்பட்ட காரணங்களே இளைய பருவத்தினரை இத்தீய வழிக்கு இழுத்துச் செல்கின்றன.

1. புதிய விடயங்களை அறிய, அநுபவித்துப் பார்க்க உள்ள ஆசைகள்.

2. படிப்பில் உள்ள சிரமங்கள், அல்லது இதர பிரச்சனைகள்.

3. காதல் தோல்வி, அல்லது மனது விரக்தியடைந்த துன்பமான சூழ்நிலைகள்.

4. பொழுதுகள் போகாமல் சலிப்புகள் உண்டாகும் நிலை.

5. பெற்றோரது தவறான வழிகாட்டல்.

6. போதைப்பொருட்களைப் பாவிப்பவர்களாகப் பெற்றோரே இருத்தல்.

இந்தக் காரணிகள் பிள்ளைகளைத் பொல்லாத போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்காதிருக்க.............

ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளின் பிரச்சனைகளை அறிந்து அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் கணவனும் மனைவியும் கண்டிப்பாக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையிலேயே உள்ளனர். எனினும் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப நேரத்திலேயும் தங்களது பிள்ளைகளுக்கு நேரங்களை ஒதுக்கி அவர்களிடம் அன்பாகப் பழக வேண்டும்.

போதைப் பொருட்களால் வரும் கேடுகள் பற்றி அவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

அவர்கள் மனங்களில் எந்த விதமான தனிமை உணர்வுகளோ, விரக்தியான எண்ணங்களோ தோன்றாதபடி நட்புடன் பழகி அவர்கள் மனங்களை ஆட்கொள்ள வேண்டும்.

இதேபோல் பாடசாலைகளும் இது விடயத்தில் மிகுந்த கவனமெடுக்க வேண்டும்.

ஏனெனில்......

இன்றைய காலகட்டத்தில் பாடசாலைகளும் போதைப்பொருட்களின் விற்பனை நிலையம் அல்லது பரிமாறிக்கொள்ளப்படும் முக்கிய இடங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு பாடசாலைகளிலும் மாணவர்களின் வயதுக்கேற்ப, போதைப்பொருட்களின் பாவனையால் வரும் கேடுகள் விளக்கிச் சொல்லப்படல் வேண்டும். அதிர்ச்சி, தெரப்பி படங்கள் மூலம் அவர்களுக்கு நிலமைகளை எடுத்துக்காட்ட முடியும்.

போதைப்பொருட்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு ஒவ்வொரு பாடசாலையிலும் குறைந்தது ஒரு ஆசிரியராவது நியமிக்கப்படல் வேண்டும். இவ் ஆசிரியர்கள் மாணவர்களின் நடவடிக்கைகளில் மாறுதல்கள் ஏற்படும் பட்சத்தில், அதனை பெற்றோருக்கு அறியத்தரல் வேண்டும்.

இத்தீய பழக்கங்கள் உள்ள மாணவர்களுடன் தனியாகக் கதைத்து, இப்பழக்கங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் வல்லமையுள்ளவர்களாக இவ் ஆசிரியர்கள் இருக்கவேண்டும்.

எனவே போதைப்பொருட்களுக்கு சட்டபூர்வமான அநுமதி தருவதால் போதைப்பொருட்களுக்கு அடிமையாவோரைத் தடுக்க முடியாது. வருமுன் காக்கும் தன்மையாலும், போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளாலுமே இவ்விடையத்தில் அதிகளவிலான வெற்றியை காணமுடியும்.

- திலீபன் செல்வகுமாரன் -
பிரசுரம்: இளங்காற்று (மார்ச் 1997)
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, May 21, 2004

புகைத்தல்

adidas_computerized.png
இன்றைய வேகமான உலகில் புகைத்தல் ஒரு நாகரீகமான செயலாகப் பலராலும் கருதப்படுகின்றது. புகைத்தலால் வரும் கேடுகளை அறிந்தவர்கள் கூட புகைத்தலை நிறுத்த முடியாமல் இருக்கிறார்கள்.

சுவாசப்பையில் புற்றுநோய் வந்து இறந்தவர்களில் 80 வீதமானவர்கள் புகைப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் 20 சிகரெட்டுகள் புகைப்பவர் - ஒரு வருடத்தில் - தனது சுவாசப்பைக்குள் ஒரு கோப்பை தார் ஊத்துவதற்கான செயலைச் செய்து விடுகின்றார்.

கணக்கெடுப்பின் படி மிகக் குறைந்த வயதில் இறப்பவர்களில் 50 வீதமானோர் புகைப்பதாலேயே இறக்கின்றனர்.

உலகத்தில் 10 வினாடிக்கு ஒருவர் புகைத்தலினால் இறந்து கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organzation) அறிவிக்கிறது.

புகைத்தலினால் வருடத்திற்கு 3 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள். 2003ம் ஆண்டளவில் புகைத்தலினால் இறப்பவர்களின் தொகை 10மில்லியனை விட அதிகமாக உயரும் என உலக சுகாதார அமைப்பு அஞ்சுகிறது.

ஆகவே புகைப்பவர்கள் புகைத்தலை நிறுத்தி புகைத்தலால் வரும் கேடுகளைத் தவிர்த்து சுகதேகிகளாக வாழ வேண்டும்.

உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது?
புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது.?
என்பதை ஆராய்ந்து பார்ப்போமேயானால்..................

புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது.

மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள்.

இந்த நிலையில் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும்.

ஆதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.

இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது.

இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.

ஆனாலும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது. புகைத்தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன:

புற்றுநோய் வருவதற்கான் காரணங்கள் குறைக்கப்படுகின்றன. மூச்சு வாங்கல் இருமல் வாய்மணம் போன்றவை இல்லாமல் போகின்றன.

பற்கள் பழுப்பு நிறங்கள் நீங்கி வெண்மையாகின்றன.

புகைப்பதை நிறுத்தினால் ஒரு காலகட்டத்தில் உடலும் மனநிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புவகைக்காதவர்களின் உடல் மனநிலைக்கு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புகைப்பதை நிறுத்துவதற்கு புகைப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் புகைப்பதை நிறுத்துவதற்கான விருப்பமும் உறுதியும் வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில் எந்த சிரமமும் இன்றி கிப்னோற்றிக் (Hypnotic) முறைமூலமும் அக்கு பஞ்சர் (Axupuncture) முறை மூலமும் புகைத்தலை நிறுத்த முடியும். ஆயினும் சிறது காலத்தின் பின் இச் சிகிச்சை பெற்றவர் பிரச்சனைகள் அல்லது வேறு காரணங்களளால் புகைத்தலை மீண்டும் நாடக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே மனதில் உறுதியுடன் ஒருவர் தானே நினைத்துப் புகைப்பதை நிறுத்துவதே 100 வீதமான வெற்றியைத் தரும்.

புடிப்படியாக ஒருவர் புகைப்பதை நிறுத்துவதாகக் கூறி பின் மீண்டும் பழைய நிலைக்கு வரக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே இனிப் புகைப்பதில்லை என்ற முடிவை உறுதியாக எடுத்து உடன் நிறுத்துவதே சிறந்த வழி.

யேர்மனியில் பிறைபேக் (Freiberg) பல்கலைக் கழகப் பேராசிரியர் டொக்டர் யோர்கன் ட்ரொஸ்கே (Dr. Jurgen Troschke) தனது ஆராய்ச்சியில் 80 தொடக்கம் 90 விதமானோர் புகைத்தலை உடனடியாகக் கைவிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என அறிவித்திருக்கிறார். எனவே இந்த வழியை நீங்களும் பின்பற்றி வெற்றியடையுங்களேன்.

பொல்லாத புகைப்பழக்கம்
இல்லாதிருப்பதே ஒழுக்கம்.

திலீபன் செல்வகுமாரன்
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, May 20, 2004

போருக்குப் பின் பொருளாதாரம்

உலகப் பொருளாதாரம் சீராக இருப்பதற்கு நாடுகளுக்கிடையிலான சமாதானங்கள் முக்கியமானது. முதலாவது உலகப்போர் 1914இல் தொடங்கியதில் இருந்து உலகநாடுகளுக்கிடையிலான சமாதானங்கள் மிகவும் சீர்குலைந்து காணப்படுகின்றது.

இதனால் ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டின் தேவைகளுக்கு தாங்களே உற்பத்திகளைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டன. மூலப்பொருட்கள் உள்ள நாடுகள் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கத் தொடங்கின. கைத்தொழில் நாடுகள் தங்களது விவசாயத்தை பலப்படுத்தத் தொடங்கின.

இந்தத் திடீர் நிலமைகளின் மாற்றங்களினால் வறிய நாடுகளிடம் பெரும் நிதி நெருக்கடி ஏற்படத் தொடங்கியது. இந்த நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக வறிய நாடுகள் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து கூடுதலான வட்டிக்கு பணங்களைப் பெற்று தற்காலிகமாக நிலைமைகளைச் சமாளிக்க ஆரம்பித்தன. ஆனால் கழுத்தில் போடப் பட்ட சுருக்குக் கயிறு போல் கடன் தொல்லைகள் வறிய நாடுகளை இறுக்கத் தொடங்கின. வட்டிகள் கூடக் கட்டமுடியாமல் பெரிதும் சிரமப்பட்டன.

உலகப்போர் முடிவுக்கு வந்தபின்னரும் உலகப்பொருளாதாரம் பெரும் சிக்கலான நிலையிலேயே இருந்தது. இன்னும் மோசமான நிலைக்கு பொருளாதார நிலை சரியத்தொடங்கியது. இதற்கு முக்கிய இருகாரணிகள், எண்ணிக்கையிலடங்காத அகதிகளின் தொகையும், பல கோடி மக்கள் வேலையின்றி இருந்தமையுமே ஆகும். விவசாயிகள் தங்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாமல் திண்டாடினார்கள். தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யமுடியாமல் தேங்கியிருந்தன. இதன் காரணமாக தொழிற்சாலைகளில் பலர் வேலை இழக்க வேண்டிய நிலைமை உருவானது. வேலை இழந்நோருக்கு மட்டுமன்றி விவசாயிகளுக்குக் கூட அரசாங்கத்தின் உதவிகள் தேவைப்பட்டன. இதனால் மீண்டும் கடன்கள் வாங்கப்பட்டு அப்போதைய நிலமைகள் சமாளிக்கப்பட்டன. ஆரம்பத்தில், பொருளாதார நிலையில் மாற்றங்கள் ஏற்படும் என்று நாடுகள் நம்பிக்கை கொண்டிருந்தன. இதனால் மேற்கொண்டு கடன்களைப் பெற்றுக்கொள்ள நாடுகள் தயக்கம் காட்டவில்லை. நாடுகளுக்குக் கடன்களைக் கொடுக்கும் இடத்தில் அமெரிக்கா முதல் நிலையில் இருந்தது.

யுத்தம் நடக்கும்போது கொடுத்த கடன்களாலும், ஆயுத உற்பத்தியாலும்
அமெரிக்கா ஒரு பணக்கார நாடாக உருவாகியிருந்தது. தொழிற்சாலைகளின் உற்பத்திகள் திறமையாகச் சந்தைப்படுத்தப்படும் என்று அமெரிக்கத் தொழிற்சாலைகள் நம்பியிருந்தன. அதனால் அமெரிக்கத் தொழிற்சாலைகள் புதுவிதமான முறைகளில் பெறுமதியான பொருட்களை உருவாக்கி ஓரளவு குறைந்ந விலையில் விற்பனை செய்யத் தொடங்கின.
அவர்கள் உருவாக்கிய பொருட்கள் தரமாக இருந்த காரணத்தால், நீண்டநாட்கள் பாவிக்கக் கூடியனவாக இருந்தன. இதன் காரணமாக மக்கள் மீண்டும் மீண்டும் இவர்களது பொருட்களை வாங்க வேண்டிய தேவைகள் இல்லாது போயின. இதனால் தொழிற்சாலைகளின் உற்பத்திகள் தேங்கத் தொடங்கின.

அமெரிக்கத் தொழிற்சாலைகளின் பொருட்களின் தரங்கள், விற்பனைகளை அவதானித்த மக்கள் பங்குச் சந்தைகளில் பெருமளவு பங்குகளை வாங்கியிருந்தனர். இந்த மக்களை ஊக்குவிக்கும் விதமாக வங்கிகளும் குறைந்த வட்டிக்குப் பணம் கொடுக்க முன் வந்தன. மக்களும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பங்குகளை வாங்கிக் குவித்தனர்.

1929 கோடைக்காலத்திலும் மீண்டும் பெரியதோர் இடி அமெரிக்காவின் பொருளாதாரத்தில் விழுந்தது. பொருட்களைச் சந்தைப்படுத்த முடியாமல் தொழிற்சாலைகள் திண்டாடின. தொழிலாலர்களுக்கு ஊதியங்களை கொடுக்க முடியாத நிலையில் பலரை வேலையிலிருந்து தொழிற் சாலைகள் நீக்கிவிட்டன. இந்த நிலமையில் மாற்றம் வரும் என அமெரிக்க மக்கள் நம்பியிருந்தனர். இதை உறுதிசெய்யும் வண்ணம் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கூவர்(Hoovar) இன் சொற்பொழிவுகளும் அமைந்திருந்தன.

இருந்தும் 1929 ஒக்ரோபர் மாதத்தில் பங்குச்சந்தையின் பெறுமதிகள் குறைய ஆரம்பித்தன. பங்குகளின் பெறுமதி முற்றாக இல்லாமல் போவதற்கு முன்னர் தங்களது பங்குகளை மக்கள் விற்கத் தொடங்கினார்கள். தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாக மூடத் தொடங்கின. 1929ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 29ம் திகதி வெள்ளிக்கிழமை நிலமை உச்சக் கட்டத்தை அடைந்தது. பின்நாளில் இந் நாள் கறுப்பு வெள்ளிக்கிழமை (Black Friday) என்று பெயர் சூட்டப்பட்டது.

அமெரிக்கா ஏற்றுமதியின் சுங்கவரியைக் கூட்டி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சி செய்தது. இதனால் சர்வதேசச் சந்தையும் பொருளாதார ஆபத்துக்குள்ளானது. தான் கொடுத்த கடன்களைத் திருப்பித்தருமாறு மற்றைய நாடுகளை அமெரிக்கா கேட்கத் தொடங்கியது.

இந்த நேரத்தில் ஜேர்மனியின் பொருளாதாரமும் அதள பாதாளத்திலேயே இருந்தது. தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்து, ஊதியங்கள் குறைந்து, கோடிக்ணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வீதிக்கு வரவேண்டிய நிலமை ஏற்பட்டது. பணம் போதாமல் மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்யமுடியாமல் திண்டாடினார்கள்.

அமெரிக்கா கொடுத்த கடன்களைத் திருப்பிக் கொடுக்க வேண்யெ ஒரு கட்டாயமான நிலையில் வங்கிகள் இருந்தன. தொழிற்சாலைகள் பல மூடப்பட்டதனால், தொழிற்சாலைகளுக்கு கடனாகக் கொடுத்த பணத்தை மீளப்பெற முடியாத நிலமைகளும் வங்கிகளுக்குச் சேர்ந்து கொண்டன.

இந்த நிலைகளைப் புரிந்துகொண்ட மக்கள் தாங்கள் வங்கியில் வைப்பீடு செய்த பணங்களைப் பெறுவதற்கு வங்கிகள் தோறும் வெள்ளம் போல் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். மக்கள் வைப்பீடு செய்த பணத்தைத் திருப்பித் தரமுடியாத நிலையில் ஜேர்மனியின் முக்கிய பெரிய வங்கிகளில் ஒன்று மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டது. வங்கிகளைக் காப்பாற்றுவதற்காக அப்போதைய ஜேர்மன் அரசு வங்கி லீவு நாட்களை அறிவித்தது.

இதேவேளையில் முதலாளி அமைப்புக்களுக்கும், தொழிலாளர் அமைப்புக்களுக்கும் இடையிலேயே பூசல்கள் ஆரம்பித்தன. அரசாங்கத்தின் ஆதரவு முதலாளி வர்க்கத்தின் பக்கமே இருந்ததால் தொழிலாளி வர்க்கம் நசுக் கப்படத் தொடங்கியது. குறைவான ஊதியத்தில வாழ்க்கைச் செலவுக்கே தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். இதனால் அப்போதைய குடியரசிடம் மக்கள் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர். இதுவே NSDSP என்ற கிட்லரின் அமைப்பு முன்னுக்கு வர முக்கிய காரணமாயிற்று.

திலீபன்.செல்வகுமாரன் - யேர்மனி
பிரசுரம் - இளங்காற்று மார்ச்-1997
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.